இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இலவச விசா (Gratis Visa) வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
புதிய விசா சேவை முகவர் நியமனம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, 2026 ஜூலை 7ஆம் திகதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சின் ஊடாக பரிந்துரைக்கப்படும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட புனித யாத்திரிகர் குழுக்களுக்கு இந்தியா செல்லும் விசாவிற்கு எவ்வித விசா கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
இந்த விசாவிற்கான விண்ணப்பங்களை கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இயங்கும் இந்திய தூதரக விண்ணப்ப மையங்களில் (Indian Consular Application Centres – ICAC) சமர்ப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அரசின் புதிய நடைமுறைகளின் படி, 12 முதல் 70 வயதுக்குட்பட்ட அனைத்து பயணிகளும் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகளை (Biometrics) கட்டாயமாக வழங்க வேண்டும். அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் விசேட விரைவுச் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இலவச விசா வழங்கப்பட்டாலும், விசா விண்ணப்பங்களை செயலாக்கும் இந்திய தூதரக விண்ணப்ப மையத்தின் (ICAC) சேவைக் கட்டணமாக ரூ.1,855 செலுத்தப்பட வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, இந்தியாவின் புனித தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை யாத்திரிகர்களுக்கு நிதிச் சுமையை குறைப்பதுடன், விசா வழங்கும் செயல்முறையையும் மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







