ஹொரண பகுதியில் பிரபலமான தர மேலதிக வகுப்பு ஒன்றை நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர், நீண்ட காலமாக மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹொரண தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மடிக்கணினி, கைப்பேசி, அதனுடன் தொடர்புடைய சிம் அட்டை மற்றும் போதைப்பொருளை அளவிட பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இலத்திரனியல் தராசு உள்ளிட்ட பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில், குறித்த நபர் தினசரி 200க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் பிரபலமான மேலதிக வகுப்பின் உரிமையாளர் என்பதும், அவர் ஹொரணை பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹொரண தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








