மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நீடித்து வந்த இஸ்ரேல்–ஹமாஸ் மோதலுக்கு முடிவு கட்டும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது என அறிவித்துள்ளார்.
“இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் அதே சமயம், இஸ்ரேல் துருப்புகள் ஒப்புக்கொண்ட எல்லைக்கு திரும்பப் பெறப்படும்,” என்று ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் விரைவில் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வதை பரிசீலித்து வருகிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்று நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளை இஸ்ரேல் அரசாங்க கூட்டத்தில் ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, “எங்கள் அன்பான பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ், இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி, “இது காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வரும், ஆக்கிரமிப்பு படைகள் முழுமையாக வெளியேறுவதை உறுதி செய்யும், மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும், கைதிகள் பரிமாற்றத்தை செயல்படுத்தும்” என்று கூறியுள்ளது. மேலும், இஸ்ரேல் ஒப்பந்த விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கும் வகையில் டிரம்ப் மற்றும் பிற நாடுகள் தலையிட வேண்டும் என ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது.
2023 அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் உயிரிழந்ததோடு, 251 பேர் பிணைக்கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர் தொடங்கிய இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் காஸாவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தின. ஹமாஸ் நிர்வகிக்கும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கையிலே, இதுவரை 67,000-க்கும் மேற்பட்டோர், அதில் 20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
கத்தார், எகிப்து, துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இந்த ஒப்பந்தம் சாத்தியமானது.
இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நீடித்தால், டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் மிகப்பெரிய வெளியுறவு சாதனையாக இது கருதப்படும் என சர்வதேச வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
இந்நிலையில், காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் கைதிகள் விடுதலை செய்தியை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர். பல பகுதிகளில் மக்கள் கூடி, இசை, நடனம் மற்றும் கோஷங்களுடன் கொண்டாடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், “இந்த ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காஸாவில் மனிதாபிமான உதவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். துன்பம் முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது,” எனக் கூறியுள்ளார்.
“இஸ்ரேலியரும் பாலத்தீனியரும் அமைதி, பாதுகாப்புடன் வாழும் நாளை உருவாக்க, இந்த வாய்ப்பை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.








