கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சுற்றுப்போட்டியானது மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டு மைதானத்தில் நேற்று (12) காலை ஆரம்பமானது.
தேசிய சோட்டாக்கன் கராத்தே போட்டிகளுக்கு அமைவாக இலங்கை சோட்டாக்கன் கராத்தே சம்மேளனத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சங்கம் இந்த சுற்றுப்போட்டினை நடாத்துகின்றது.
இது கிழக்கு மாகாண சோட்டாக்கன் கராத்தே சங்க தலைவர் கே.கேந்திரமூர்த்தி தலைமையில் ஆரம்பமானது.











இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை சோட்டாக்கன் கராத்தே சம்மேளனத்தின் செயலாளர் ஏ.ரவூப் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் மட்டக்களப்பு விளையாட்டுக்கழக தலைவருமான துரைசிங்கம் மதன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் உள்ள சோட்டக்கன் கராத்தே சங்கங்களிலும், பாடசாலைகளிலுமிருந்து பெருமளவான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின்போது அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சு,கல்வி அமைச்சு ஆகியனவற்றினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட போட்டிகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு நாட்டிற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களும் வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.








