வாழைச்சேனை காகித நகரத்தை புதிய தோற்றத்துடன் புத்துயிர் பெறச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமென, தேசிய காகித உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் ஒரு வருடத்தில் அடைந்த முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“மூடப்பட்டிருந்த வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை அரசாங்கத்தின் கீழ் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் நீக்கப்பட்டு, தேவையான உதிரிப் பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, 2025 ஜனவரி 12ஆம் தேதி உற்பத்தி மீண்டும் தொடங்கியது,” என கூறினார்.

அவர் மேலும்தெரிவிக்கையில்,
“12 மணி நேர உற்பத்தி முறை மாற்றப்பட்டு, தற்போது 24 மணி நேர உற்பத்திக்காக இயந்திரங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த ஆண்டு மே மாதத்திற்குள் தொழிற்சாலையின் அனைத்து செலவுகளையும் ஈடுகட்டக்கூடிய நிலையை அடைந்துள்ளோம்,” என்றார்.
தற்போது இலாபநிலை நோக்கி நகரும் இந்த நிறுவனம் வங்கிக் கடன்கள் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்தி வருவதாகவும், ஊழியர்களுக்கான வீடுகளை புதுப்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அந்தப் பகுதியை சுற்றுலாத் துறைக்குப் பயன்படுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. வாழைச்சேனை காகித நகரம் அதன் உச்சக்கட்ட காலத்தில் “காகித நகரம்” எனப் பிரபலமடைந்ததோடு, தனிப்பட்ட ரயில் நிலைய வசதியையும் பெற்றிருந்தது. தற்போது அந்த ரயில் பாதையும் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தேசிய காகித நிறுவனத்தின் கீழ் உள்ள மற்றொரு தொழிற்சாலையான எம்பிலிப்பிட்டி காகிதத் தொழிற்சாலை, தனியார் துறைக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.








