யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (15) பரபரப்பாக மாறியது.
இடமாற்றக் கொள்கையில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டிய ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதன் போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாண கல்வி செயலாளர் டிரஞ்சன், கல்வி பணிப்பாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலுக்காக அழைக்கப்பட்டனர். கலந்துரையாடல் முடிந்ததும், செயலாளர் டிரஞ்சன் போராட்டக்காரர்களிடம் “உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்தார்.
ஆனால் போராட்டக்காரர்கள் ஆளுநர் செயலகத்துக்குள் செல்ல முயன்றபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதையடுத்து, ஆளுநர் பின் பக்கத்தால் ஆளுநர் செயலகத்தில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆளுநரின் செயலாளர், ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். “இடமாற்றத் தீர்மானங்களைப் பின்பற்றி செயற்படுங்கள்” என அவர் தெரிவித்ததாக ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு எதிராக நாடளாவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மூன்றாவது நாளாக நடைபெற்ற இப்போராட்டத்தில் “ஆசிரியர்களை பழிவாங்காதே”, “அரசியல் தலையீட்டை நிறுத்து”, “ஆளுநரே பதில் கூறு” போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமைத்துடன் பல ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் இருவரும் முந்தைய நாளில் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.








