மட்டக்களப்பு வவுணதீவில் போலியான அனுமதி பத்திரம் தயாரித்து சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர், கொழும்பிலிருந்து வந்த புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (17) நடைபெற்ற இச்சம்பவத்தில், சந்தேகநபர்கள் “அழியும் மை” கொண்ட பேனாவைப் பயன்படுத்தி மணல் போக்குவரத்துக்கான அனுமதி விண்ணப்பப் பத்திரங்களை போலியாக பூர்த்தி செய்து வந்தது புலனாய்வில் தெரியவந்துள்ளது.
கொழும்பிலிருந்து வந்த சோதனைப் பிரிவு அதிகாரிகள் வவுணதீவு பிரதேசத்தில் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற இருவரையும் நிறுத்தி அனுமதி ஆவணங்களைச் சரிபார்த்தனர். அப்போது, ஆவணங்கள் அழியும் மை கொண்டு எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, போலியான அனுமதி பத்திரங்களுடன் இரண்டு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு, சந்தேகநபர்கள் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










