அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டும், இணையவழி நிதி மோசடிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் உடனடியாக 109 என்ற அவசர பொலிஸ் உதவி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அறிமுகமில்லாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் வங்கி அல்லது பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் கோரும் சம்பவங்கள், சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள், சமூக ஊடகங்கள் ஊடான மோசடிகள் அல்லது இணையவழி பணப் பறிப்பு முயற்சிகள் இடம்பெற்றால், தாமதிக்காமல் 109 என்ற உதவி இலக்கத்தை தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 109 அவசர உதவி சேவை 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், இவ்வாறான சம்பவங்களை மறைக்காமல் உடனடியாக அறிவிப்பது குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த உதவும் என்றும் இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்..









