எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பாதுகாப்புக்காக பிஸ்டல் கோரியிருப்பார்களாக இருந்தால் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுத்து பாதுகாப்பு விடயங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் அதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் முன்னாள் அரசாங்கத்திலிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பாதுகாப்பை கோருவார்களாக இருந்தால் அதுதொடர்பிலும் பொலிஸார் கவனம் செலுத்துவார்கள் என்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தாா்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருக்கு மேல் தமது பாதுகாப்புக்காக பிஸ்டல் பெற்றுக்கொடுக்குமாறு கோரியுள்ளனர். எதிர்க் கட்சியிலுள்ளவர்களே துப்பாக்கி கோரியுள்ளார்கள் என்றே நான் கருதுகிறேன். யார் யார் என்ற விவரத்தை சபாநாயகரிடம் கேட்டறிய தவறிவிட்டேன்.
இதுதொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுத்து பாதுகாப்பு விடயங்களை உறுதிப்படுத்தியதன் பின்னரே அதற்கான நடவடிக்கையை எடுக்க முடியும்.
ஒருபுறம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு இடையில் மோதல் நிலைமை இருக்கின்ற நிலையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் முன்னாள் அரசாங்கத்திலிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பாதுகாப்பை கோருவார்களாக இருந்தால் அதுதொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்துவார்கள்.
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி அவசியமில்லை என்று கருதுகிறேன். எங்களுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தல் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் பொலிஸாரிடம் அப்படியொரு முறைப்பாடு ஏதும் பதிவாகவும் இல்லை எனவும் தெரிவித்தார்.








