காசா நோக்கிச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக்கப்பல் தொடரணியான ‘குளோபல் சுமூத்’ (Global Sumud Flotilla) மீது இஸ்ரேலிய கடற்படை சைப்ரஸ் (Cyprus) மற்றும் கிரீட் (Crete) நாடுகளுக்கு அருகேயுள்ள சர்வதேச கடல் பகுதியில் நடத்திய தாக்குதல், முற்றுகை மற்றும் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றிற்கு ஐநாவின் மனித உரிமைகள் சிறப்புத் தூதர் பிரான்செஸ்கா அல்பானீஸ் (Francesca Albanese) தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
உலக நாடுகளின் மௌனத்தையும், இஸ்ரேலின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கையையும் சாடி அவர் அறிக்கையிளை வெளியிட்டுள்ளார்.
பாலஸ்தீன ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்கான ஐநா சிறப்புத் தூதர் பிரான்செஸ்கா அல்பானீஸ், தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கமான ‘X’-இல் இந்த எச்சரிக்கைச் செய்தியினை விடுத்துள்ளார்.
”அதிர்ச்சி! ஐரோப்பிய மற்றும் சர்வதேச கடல் பகுதியில் (International Waters) சுதந்திரமாகப் பயணிக்கும் சிவிலியன் கப்பல்களை வளைத்துப் பிடிக்கவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேலுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? இது ஐரோப்பா முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்ய வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் தனது இனப்படுகொலையைத் தொடர்ந்து வரும் இஸ்ரேல், ஐரோப்பியக் கடலில் ரோந்து செல்வதற்கும், கப்பல்களைக் கைப்பற்றி சிவிலியன்களைக் கடத்துவதற்கும் அனுமதிக்கப்படுவது ஒரு அருவருப்பான செயலாகும் (Abomination). பிணைக் கைதிகளைப் பிடிப்பது ஒரு சர்வதேசக் குற்றமாகும் என்று அவர் சாடியுள்ளார். இதனை “எல்லைகளற்ற நிறவெறி” (Apartheid without borders) என்றும் அவர் வர்ணித்துள்ளார்.
மத்திய தரைக்கடல் பகுதியைச் சுற்றியுள்ள ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காசாவின் மீதான இஸ்ரேலின் கொடூரமான முற்றுகையை உடைக்க முயலும் சிவிலியன் கப்பல்களைப் பாதுகாக்க மத்திய தரைக்கடல் நாடுகள் தங்களது கடற்படைகளை அனுப்ப வேண்டும்.
ஐரோப்பிய நாடுகள் வெறும் கண்டனங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், இஸ்ரேலின் நிறவெறிப் போக்கிற்குத் தங்களது உடந்தையாக இருக்கும் நிலையை (Complicity) முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் அமைச்சர் இத்தாமர் பென்-க்வீர், கைது செய்யப்பட்ட இத்தாலிய ஆர்வலர்களை இழிவுபடுத்தியதைக் கண்டித்த இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு அல்பானீஸ் நேரடிப் பதில் அளித்துள்ளார்.

“பிரதமர் மெலோனி அவர்களே, பென்-க்வீரின் செயலைக் கண்டித்தது நல்லதுதான். ஆனால் வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது, ஐரோப்பிய ஒன்றியம் – இஸ்ரேல் இடையிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தை (EU-Israel Association Agreement) உடனடியாக நிறுத்தி வைப்பதற்கு இத்தாலி அரசு முட்டுக்கட்டை போடுவதை நிறுத்த வேண்டும்,” என்று அவர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
இந்த ஆர்வலர்களுக்கு இஸ்ரேல் வழங்கிய “மரியாதைக் குறைவான” சிகிச்சையானது, இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவானதே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேசமயம் இஸ்ரேலிய கடற்படை ‘குளோபல் சுமூத்’ அமைப்பின் அனைத்து 50 கப்பல்களையும் சைப்ரஸ் மற்றும் கிரீட் கடல் பகுதியில் வளைத்துப் பிடித்து, சுமார் 430-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆர்வலர்களைக் கைது செய்துள்ளது. இவர்களுள் தென்னாப்பிரிக்கா, இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் அடங்குவர். சர்வதேச கடல் பகுதியில் ஐநா சட்டங்களை (UNCLOS) மீறி இஸ்ரேல் நிகழ்த்தியுள்ள இந்த நடவடிக்கை தற்போது ஐநாவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.








