பிள்ளையான் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைக்கும் வரை காத்திருக்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அரசாங்கம் எதிர்காலத்தில் எந்த அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வர முடியாத சூழ்நிலையை உருவாக்கும் வகையில் செயற்படுவதாகவும், தங்களது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கு அச்சப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் தங்களை பின்தொடர்வதை விட மக்கள் முன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், மக்கள் ஆணை இருப்பதாக கூறுவதற்கு பதிலாக மாகாணசபை தேர்தலை நடத்துமாறும் தேசிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்தினார்.
பிள்ளையான் தொடர்பான விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைத்தால் தானும் பல கேள்விகளை விசாரணை அதிகாரிகளிடம் முன்வைப்பேன் என தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை தூதரகத்திற்கு அழைத்து எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அதேவேளை, புத்தசாசனத்தை அவமதிக்கும் நோக்கில் திட்டமிட்ட வகையில் சில தரப்புகள் செயற்படுகின்றன என்றும், அட்டமஸ்தான தேரர் விவகாரத்தை அரசியலாக்குவது முற்றிலும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த பிரச்சினைக்கு நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.








