வடக்கு மாகாண தென்னை வலயத் திட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் மானியமாக வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகளை ஒருவர் விற்பனை செய்துள்ளதாக வவுனியா பம்பைமடு பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வடக்கு பகுதியில் தென்னை உற்பத்தி வலயத்தை உருவாக்க அரசாங்கம் கடந்த ஆண்டு முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அத்திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கருக்கு 64 தென்னை கன்றுகள் வீதம் மானியமாக வழங்கப்படுவதுடன், உரம் மற்றும் நீர் வழங்கலுக்கான கொடுப்பனவுகளும் அரச நிதியின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வவுனியா மாவட்ட தென்னை அதிகார சபைக்குட்பட்ட பம்பைமடு கமநல அபிவிருத்தி பிரிவின் செக்கட்டிப்புலவு பகுதியில் ஐந்து ஏக்கர் காணி கொண்டிருந்த வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர், மானியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 320 தென்னை கன்றுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அந்தக் கன்றுகளை காணியில் நடவு செய்யாமல், ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம் விற்பனை செய்து விட்டு, குறித்த நபர் மீண்டும் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மானியத் திட்டம் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தி அதிகாரிகளின் மேற்பார்வையில் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், மானியமாக வழங்கப்பட்ட 320 தென்னை கன்றுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், பம்பைமடு பகுதிக்குட்பட்ட சிலருக்கு வழங்கப்பட்ட மானியத் தென்னை கன்றுகள் நடவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்தும், அபிவிருத்தி அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு பரிந்துரை செய்யாத காரணத்தால், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரம் மற்றும் நீர் வழங்கல் கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








