தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாகவும், இதேபோன்று திறம்பட செயல்பட்டால் 2029 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வட மாகாண முன்னாள் முதல்வரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஊழலைத் தவிர்த்து, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அரச நியமனங்களில் நீதியான அணுகுமுறையைப் பின்பற்றுவதாக அவர் பாராட்டினார். எனினும், தமிழர் பிரச்சினைகளில் முன்னைய சிங்கள ஆட்சிகளைப் போலவே தற்போதைய அரசாங்கமும் செயல்படுவதாகவும், வடக்கு–கிழக்குக்கான முன்னுரிமை இன்னும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த அரசுகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிர்வாகம் சிறப்பாக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.








