வடமாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 7,606 நாய்களுக்கு கருத்தடைச் சிகிச்சை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் செயல்படும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்கும் உள்ளூராட்சித் திணைக்களம் ஆகியவற்றின் இணைப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மாவட்ட வாரியாக கருத்தடை செய்யப்படவுள்ள நாய்களின் எண்ணிக்கை வருமாறு:
யாழ்ப்பாண மாநகர சபை – 120 நாய்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஏனைய உள்ளூராட்சி சபைகள் – 5,216 நாய்கள்
கிளிநொச்சி மாவட்டம் (கரைச்சி தவிர்ந்த பகுதிகள்) – 350 நாய்கள்
முல்லைத்தீவு மாவட்டம் – 750 நாய்கள்
வவுனியா மாவட்டம் (மாநகர சபை உட்பட) – 1,170 நாய்கள்
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, வவுனியா மாவட்டத்தில் இதுவரை 72 நாய்களுக்கு கருத்தடைச் சத்திரசிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஏனைய மாவட்டங்களிலும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நாளை மறுதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாநகர சபையிலும், மறுநாள் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையிலும், எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா மாநகர சபையிலும் இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ள புதிய ‘விலங்கு நலச் சட்டத்தின்’ ஏற்பாடுகளுக்கு அமைவாக, விலங்குகளின் உரிமைகள் மற்றும் நலன்களுக்கு உயர்ந்த முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளின் நலனைப் பாதுகாப்பதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு பொதுமக்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.








