நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கு விரைவாக நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாய அமைச்சர் கே.டீ. லால் காந்தவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இதுவரை 6,073 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதனால் சுமார் 4,707 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியாக மொனராகலையில் 1,334 ஏக்கரும், பொலன்னறுவையில் 1,100 ஏக்கரும், அம்பாந்தோட்டையில் 435 ஏக்கரும், அம்பாறையில் 1,004 ஏக்கரும், அனுராதபுரத்தில் 2,200 ஏக்கரும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் நேரில் சென்று பரிசோதிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் தகுதியான விவசாயிகளுக்கு நட்டஈடு விரைவாக வழங்கப்படவுள்ளது.
நெல், சோளம் உள்ளிட்ட 6 வகையான பயிர்களுக்கு ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக 100,000 ரூபாய் வரை, அதிகபட்சம் 5 ஏக்கர் பரப்பளவுக்கு அரசாங்கத்தால் நட்டஈடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் பயிர்கள் சேதமடைந்துள்ள விவசாயிகள், விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் கள அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கலாம். மேலும், விவசாய அபிவிருத்தி மையங்களில் உள்ள சேத அறிவிப்புப் பதிவேட்டிலும் பயிர்ச் சேதங்களை பதிவு செய்ய முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 1918 என்ற விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையின் குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு இலக்கத்தை தொடர்புகொள்ளலாம்.








