சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை, உண்மையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படாமல் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, உண்மையில் எந்தவொரு பொருளும் இறக்குமதி செய்யப்படாமல் பெருமளவிலான வெளிநாட்டு நாணயம் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைகளின் பின்னணியில் முன்னதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின்படி, 89 நிறுவனங்கள் ஊடாக 2023 ஜனவரி முதல் 2025 செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் உண்மையான இறக்குமதிகள் இன்றி பெருமளவிலான வெளிநாட்டு நாணயப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிதிப் பரிமாற்றங்கள் தொடர்பில் மேலும் பல நபர்களின் தொடர்புகள் குறித்து நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.








