அட்டாளைச்சேனை – பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலையில் கல்முனை பிராந்திய ஆய்வு கூடத்தின் விரிவாக்கல் நிலையம் இன்று (09) திறந்து வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய ஆய்வு உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இபாம் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவிற்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.
கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகளில் இருந்து கிடைக்கப்பெறும் இரத்தம், சிறுநீர் மற்றும் சலி மாதிரிகளை குறித்த ஆய்வு கூடத்தில் மிக விரைவாக பரிசோதனை செய்து அதன் பெறுபேறுகளை வழங்கி வைக்கும் நோக்கில் இந்நிலையம் செயற்படும் என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சஹீலா இஸ்ஸதீன் இதன்போது தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டும், எரிபொருளை சிக்கனமாக பாவிப்பதற்கும், மருத்துவ ஆய்வுகூட உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கும், மருத்துவ பரிசோதனை கருவிகளை முகாமைத்துவம் செய்வதற்கும் இந்நிலையம் ஏதுவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹீர், மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.ஏ.கபூர், பிராந்திய மலேரியா மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌசாட், மாவட்ட ஆயுர்வேத பிராந்திய இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ.நபீல், தொழில் மற்றும் சுற்றுச்சூழல் உணவுப் பாதுகாப்பு பிராந்திய வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எஸ்.எம்.நெளசாட், பொதுமக்கள் சுகாதார பிராந்திய பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.ஏ.எஸ்.எம்.எஸ்.சாபி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


