தெவிநுவரயில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உத்பலவண்ணா ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்திர பெரஹராவில் பங்கேற்க வந்த காவடி நடனக் குழுக்களைச் சேர்ந்த பலர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (28) காலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரஹரா பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 1,500 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து காவடி நடனக் குழுக்களும் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவடி நடனக் குழுக்களின் பங்கேற்பை மையமாகக் கொண்டு இரு பாதாள உலகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு அண்மையில் கோயிலுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் அளவுக்கு தீவிரமடைந்திருந்தது.
இந்தப் பின்னணியில், காவடி நடன ஊர்வலத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்தறை மாவட்டச் செயலாளருக்கு பரிந்துரைத்திருந்தார்.
எனினும், நேற்று (27) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர், கடந்த ஆண்டுகளில் பங்கேற்ற அனைத்து காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, தெவிநுவர வருடாந்திர பெரஹரா இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








