படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இன்று வெள்ளிக்கிழமை (31) நடேசனின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச விசாரணை கோரி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கே.கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, இரா.துரைரெட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட அரசியல்வாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு அன்னாரின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, அங்கு படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு ஊடக அமையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 20ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்படும் நிலையில் கடந்த இருபது வருடங்களாக அவரின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இன்று வரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 35 தமிழ் ஊடகவியலாளர்கள், 05 சிங்கள ஊடகவியலாளர்கள், 03 முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அடங்குகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் ஒரு ஊடகவியலாளரும், ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளர்களும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
1985ஆம் ஆண்டு தொடங்கிய தமிழ் ஊடகவியலாளர் படுகொலைகள் 2010ஆம் ஆண்டு வரை தொடர்ந்துகொண்டே இருந்தது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெற்றுவந்த படுகொலை ஆட்சியை ஊடகத்துறையின் பெரும்பங்குடன் முடிவுக்கு கொண்டுவந்த இலங்கை அரசாங்கம் இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தபோதும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அத்தோடு, நாட்டில் பெருந்தொகையாக படுகொலை கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் இன்று வரை விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை.
இலங்கையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட்ட வேண்டும்.
இலங்கையில் இன்று வரை சுட்டுக்கொல்லப்பட்ட, காணாமல்போன ஊடகவியலாளர்களின் பெயர், விபரங்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடவேண்டும்.
இலங்கையில் தொடரும் மறைமுகமான ஊடக அடக்குமுறையை தடுத்து நிறுத்தி ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் படுகொலை விசாரணையை மீள ஆரம்பிக்கவேண்டும் என்றுள்ளது.