தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து அடுத்த சில மணித்தியாலங்களில் புயலாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 11 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியிட்ட நேரத்துலிருந்து 12 மணித்தியாலத்தில் இது நிகழலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை , மட்டக்களப்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 150 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் வேறு சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, மேல், வடமேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
இந்நிலையில் இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதேசமயம் கடல் நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.













