இந்தியாவின் பாரிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி, நேற்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அதன்போது, இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்துள்ள ஜனாதிபதி அநுர குமார, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முயற்சியாளர்களை வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து, இந்திய வர்த்தகப் பிரதிநிதிகள் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடலில், டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.