மூதூர் – அறபாநகர் பாலத்தை பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் உதவியுடன் தற்காலிகமாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் பீ.டி.எம். பைஸர் தெரிவித்துள்ளார்.
சேதமடைந்துள்ள குறித்த பாலத்தின் ஊடாக வாகனப் போக்குவரத்தை மேற்கொள்வதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த தற்காலிக புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, இன்று (01) சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூதூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் பீ.டி.எம். பைஸர், பாலத்தின் தற்போதைய நிலைமை மற்றும் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
இதன்போது, அறபாநகர் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் அங்கு கலந்து கொண்டு, பாலத்தின் அவசர புனரமைப்பின் தேவையை பதில் தவிசாளரிடம் எடுத்துரைத்தனர்.
மூதூர் – அறபாநகர் பாலம் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக சேதமடைந்திருந்த நிலையில், பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு இந்த தற்காலிக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







