வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று (06) இலத்திரனியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையர்களுக்கு தற்போது விநியோகிக்கப்பட்டுவரும் 7,50,000க்கும் அதிகமான கடவுச்சீட்டுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட வேண்டும்.

கடவுச்சீட்டுகளை விநியோகிப்பதில் தற்போது சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு அச்சிடும் பணிகள் புதிய நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதை அடுத்து இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கொள்கை ரீதியாகக் கடந்த அரசாங்கம் முன்னர் மேற்கொண்ட தவறான தீர்மானமே இந்த நெருக்கடி நிலைக்குக் காரணம்.
கடவுச்சீட்டுக்கான முன்பதிவுகளை மேற்கொண்டு சிலர் ஐந்து முதல் ஆறு மாதங்களாகக் காத்திருக்கின்றனர்.
இதன்காரணமாக கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான பொறுப்பை புதிய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்கான விலை மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.