சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னணி நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு முகாமையாளர்களும் தாங்கள் பணியாற்றிய தனியார் வங்கிகளின் வளாகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வாறானதொரு நடவடிக்கையில் வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளில், குறித்த சட்டவிரோத பணப் பரிமாற்றத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான நபரிடமிருந்து இந்த வங்கி அதிகாரிகள் வாராந்தம் பணம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சில அதிகாரிகளுக்கு வாராந்தம் 30,000 ரூபாய், 50,000 ரூபாய் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட முகாமையாளர்களில் ஒருவருக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சுமார் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஏனைய நபர்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








