கிழக்கிலங்கையின் மிக பழமையான அம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நேற்று (02) நடைபெற்றது.
தேற்றாத்தீவின் இயற்கை அழகு கொஞ்சும் கடற்கரையில் அமர்ந்து, வருவோருக்கு வேண்டும் வரமளிக்கும் வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்திற்கான கிரியைகள் கடந்த 29ஆம் திகதி ஆரம்பமானது.
நேற்று முன்தினம் மாலை வரையில் என்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கிரியா காலத்தில் பிரதிஸ்டா பிரதம குருவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. க.வடிவேல் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்களினால் இந்த கும்பாபிசேக கிரியைகள் நடாத்தப்பட்டன.
நேற்று காலை விசேட ஹோமபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, மலர் தூபி, பிள்ளையார் ஆலயங்களுக்கு சென்று அபிசேகம் செய்யப்பட்டதுடன், பிரதான தூபி மற்றும் நாகதம்பிரான் ,வீரபத்திரர் ,பைரவர் ஆகிய ஆலயங்களுக்கும் அபிசேகம் செய்யப்பட்டன.
இதன்போது பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, மூலமூர்த்தி நாயகியாகவுள்ள வடபத்திரகாளியம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்று, அடியார்கள் வழிபடும் வகையில் தசமங்கல தரிசனம் செய்யும் வழிபாடும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.