தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று ரன்விமன வீடுகள் பயனாளிகளிடம் கடந்த (06) கையளிக்கப்பட்டுள்ளன.
சமுர்த்தி திணைக்களத்தினால் தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலும் பல்வேறு சமூக நலத்திட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் பிரதேச சமுர்த்திப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகள், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றன.
இதன்போது, பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு சிப்தொரா சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களின் எதிர்கால தொழில் வழிகாட்டலுக்காக நிதிச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், சமுர்த்தி வங்கியின் ஊடாக குறைந்த வட்டியில் சவிபல கடன்கள் வழங்கப்பட்டதுடன், அஸ்வெசும பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்களும் வழங்கப்பட்டன.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் கொடி விற்பனை மூலம் அதிகளவு நிதியை சேகரித்த சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் தலைவர்களுக்கு இதன்போது பரிசில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் கொடி விற்பனை மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக பிரதேச செயலக கணக்காளர் திருமதி தயானி சசிகுமார், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். கங்காதரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திருமதி புனித நாயகி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.














