மன்னார், வங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்காலை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர்கள், கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் காணப்படுவதை அவதானித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் உடனடியாக வங்காலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், இதுவரை உயிரிழந்தவரை அடையாளம் காண முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இந்திய மீனவரா அல்லது கடற்றொழிலுக்குச் சென்று காணாமல் போன உள்ளூர் மீனவரா என்பது தொடர்பிலும் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வங்காலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








