2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகி, செப்டம்பர் 05ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
பரீட்சையை நடத்துவதற்காக நாடு முழுவதும் 2,532 பரீட்சை மத்திய நிலையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், அவர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர். இவர்களில் 264,496 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாகவும், 107,814 பேர் தனியார் விண்ணப்பதாரர்களாகவும் உள்ளனர்.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர், அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறையாக சான்றொப்பம் செய்து கொள்வது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனுமதி அட்டை தொலைந்து போனால், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அதனை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.
தேசிய அடையாள அட்டை இல்லாத நிலையில், தற்காலிக அடையாள ஆவணமாகப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சை கால அட்டவணையை முறையாகக் கவனத்தில் கொண்டு, பரீட்சை ஆரம்பிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள், புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, எந்தவிதமான பரீட்சை மோசடிகளிலும் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டமை காரணமாக பல மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, ஏதேனும் அவசர அல்லது அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால், மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பரீட்சைகள் திணைக்களம் தயார் நிலையில் இருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.








