மட்டக்களப்பில் ரூமேனியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக தலா 16 இலட்சம் ரூபா வீதம் 12 பேரிடம் ஒரு கோடியே 92 இலட்சம் ரூபா பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டுவந்த சட்டவிரோத வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நேற்று (3) இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தினர் முற்றுகையிட்டதையடுத்து, மூதூரைச் சேர்ந்த 29 வயதுடைய முகவர் நிலைய உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் கல்முனை வீதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்து வெளிநாட்டு வேலைவாய்பு முகவர் இல்லத்தின் உரிமையாளர் முகநூல் ஊடாக ரூமேனியா, போலாந்து, சோபியா போன்ற நாடுகளுக்கும் ஜரோப்பிய நாடுகளுக்கும் வேலைவாய்பு உள்ளதாக விளம்பரம் செய்துவந்துள்ளார்.
இதனையடுத்து வெளிநாட்டில் வேலைவாய்பு பெறுவதற்காக பலர் நேரடியாக குறித்த முகவர் நிலையத்துக்கு சென்று விண்ணப்படிவங்களை நிரப்பி கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மற்றும் பொலிஸ் நற்சான்று பத்திரங்கள் உட்பட ஆவணங்களுடன் 12 பேர் தலா 16 இலச்சம் ரூபா வீதம் 2023ம் ஆண்டு வழங்கியுள்ளனர்.
இருந்தபோதும் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாது நீண்ட காலமாக இழுத்தடித்து வந்துள்ளார் இந்த நிலையில் பணத்தை வழங்கியவர்கள் பணத்தை திருப்பிதருமாறு கேட்ட நிலையில் அதனை வழங்காததையடுத்து அவருக்கு எதிராக சிலர் மட்டக்களப்பு விசேட புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்ததுடன் கொழும்பிலுள்ள அரச வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் 12 பேர் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து வேலைவாய்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவு பணிப்பாளர் கபில கருணாரத்தின தலைமையிலான குழுவினர் சம்பவதினமான நேற்று (03) பகல் குறித்த வேலைவாய்பு முகவர் நிலையத்தை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டபோது, அந்த முகவர் நிலையம் பதிவு செய்யப்ப டாமல் போலியாக இயங்கி வந்துள்ளதுடன் ரூமேனியா போலாந்து, சோபியா மற்றும் ஜரோப்ப நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக 74 பேரிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஆவணங்கள் அடங்கிய 74 பையில்களை மீட்டனர்.
இதனை தொடர்ந்து முகவர் நிலையத்தில் காட்சிப்படுத்துவற்காக பொருத்தப்பட்டிருந்த பேயர் பலகைகளை கழற்றி எடுத்ததுடன் அதன் உரிமையாளரை கைது செய்தனர்.
இதில் கைது செய்ய்பட்டவர் 29 வயதுடைய மூதூரைச் சேர்ந்தவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த முகர் நிலையம் தொடர்பாக முகநூல் விளம்பரத்தை பார்த்து வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்காக, யாழ்ப்பாணம், மன்னர், வவுணியா. மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 70 க்கு மேற்பட்டவர்கள் தலா 16 இலச்சம் தொடக்கம் 20 இலச்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.