இலங்கையிலிருந்து கடல் வழியாக தனுஷ்கோடிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு இலங்கையர்களை இந்திய கடலோரக் காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வத்தளையைச் சேர்ந்த லூஸிநந்த் (30) மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மன்னார் பேசாலை கடற்கரையிலிருந்து ரூ.3 லட்சம் பணம் செலுத்தி படகில் புறப்பட்டு, தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை அதிகாலை வந்தடைந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இருவருக்கும் இலங்கையில் மெத்தம்பெட்டமைன், ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் மற்றும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், அண்மையில் வத்தளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடனும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருவரையும் இலங்கைக்கு மீள ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஒரு வாரத்திற்குள் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.







