அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (04) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது.
சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது ஊழல்வாதிகள் அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
எவரையும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது. ஊழல்வாதிகளை மக்கள் அறிவார்கள். அவர்களின் ஊழல் மோசடிகளையும் அறிவார்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகவும்.
கடந்த அரசாங்கங்களைப் போன்று சட்டத்தை தமது விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த போவதில்லை.
வரவு செலவுத் திட்டத்தை தொடர்ந்து கிளின் ஸ்ரீலங்கா செயற்திட்டம் சகல அமைச்சுக்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும். ஊழல் ஒழிப்பு என்பது கிளின் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகும்.
இதற்கமைய கடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஊழல்வாதிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்து கூட்டணியமைக்க முயற்சிக்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஆணையை மலினப்படுத்த இடமளிக்க போவதில்லை. என கூறியுள்ளார்.