நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்கான சுமார் 30 இலட்சம் ரூபாய் கொடுப்பனவுகளை மோசடி செய்ததாகக் கூறப்படும் இரு பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹற்றன் பொலிஸ் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் ஹற்றன் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ். பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நோர்வுட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவுக்குப் பொறுப்பாக பணியாற்றிய அதிகாரி என்றும், மற்றையவர் அதே பிரிவில் கடமையாற்றிய மற்றொரு பெண் அதிகாரி என்றும் தெரிவிக்கப்படுகிறது.
2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் சில, சந்தேகநபர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட கணக்காய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.
நோர்வுட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு கிடைத்த அநாமதேய முறைப்பாடும் இந்த மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நிதி அமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசாரணைகளில் மோசடி தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் பல அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், சந்தேகநபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலும் மூன்று அதிகாரிகளின் பணிகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகங்களிலும் அஸ்வெசும மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளில் இதுபோன்ற முறைகேடுகள் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.







