மாணவர்களின் பார்வைத்திறனை மேம்படுத்தி அவர்களின் கற்றல் ஆற்றலை அதிகரிக்கும் நோக்கில், ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜ் (Rotary Club of Batticaloa Heritage) “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” (Sharp Eyes, Learn Better) எனும் திட்டத்தின் முதற்கட்டத்தை கல்குடா கல்வி வலயத்தில் ஆரம்பித்து வைத்துள்ளது.
இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக, ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஒன்று கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 14 பாடசாலைகளைச் சேர்ந்த 16 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதன்மூலம் ஏறத்தாழ 4,000 மாணவர்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவைச் சேர்ந்த பிரபல விழிப்பியல் நிபுணர் (Optometrist) நிலூஷன் அவர்களினால் மாணவர்களிடம் காணப்படும் கண் பார்வைக் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது எவ்வாறு என்பது குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆசிரியர்களின் உதவியுடன் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு முதற்கட்ட கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டு பின்னர் மாணவர்களுக்குத் தொழில்முறை கண் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.









அதனைத்தொடர்ந்து பார்வைச் குறுபாடு உள்ள மாணவர்களுக்கு பொருத்தமான பார்வைக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் தெளிவான பார்வையை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் கல்விச் செயல்பாடுகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.







