SLS தரச்சான்றிதழ் பொறிக்கப்படாத மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளை பூர்த்தி செய்யாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் இலங்கை தரநிலைகள் நிறுவனம் (SLSI) மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சோதனைகளின் போது தரமற்ற தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
சந்தைகளில் SLS தரச்சான்று இல்லாத தலைக்கவசங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவது தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், அவை மோட்டார் சைக்கிள் பயணிகளின் உயிர் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, பொதுமக்கள் SLS தரச்சான்று பொறிக்கப்பட்ட தரமான தலைக்கவசங்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும், பாதுகாப்புத் தரநிலைகளை பின்பற்றி தயாரிக்கப்படும் தலைக்கவசங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிப்பது அவசியம் என்றும் தேசிய வீதி பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.








