மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்சேனை, வால்கட்டு,கடுக்காமுனை,அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் (06) அவதானித்து பிரதேசத்திற்கு பொறுப்பானவர்களிடம் கூறினர். வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வருகை தந்து காட்டுயானைகளை பார்வையிட்டனர்.
இது தொடர்பில் ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறுகையில்,
தற்போது பகல் நேரம் வேளாண்மை அறுவடை பண்ணப்பட்டு கொண்டிருக்கின்ற நேரம், கிராமவாசிகளும் விவசாயிகளும் தற்போது அதனை சூழ காணப்படுகின்றனர். எனவே காட்டு யானைகளை தற்போது துரத்துவது சாத்தியமற்றது.
எனினும் இன்றைய தினம்(06) பிற்பகல் 6.00 மணிக்கு பிறகு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்தி விடுப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் எனவும் கருத்து தெரிவித்தனர்.
நேற்று(05) இரவு வால்கட்டு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானைகள் வாழைத்தோட்டங்களையும் பயிர்தரும் தென்னை மரங்களையும் வீழ்த்தியுள்ளதுடன், கிராமத்திற்குளும் உள்நுழைந்துள்ளது. இதனால் தான் மிகவும் அச்சத்துடன் வாழ்வதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.