மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் தமக்கு தொடர்பில்லை என்று மீண்டும் லியுறுத்தியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இது தொடர்பில் தனக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டை ஏழைகளுக்கு உதவப் பயன்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றிடம் இதனை குறிப்பிட்ட சேனசிங்க, இரண்டு மருத்துவமனைகளுக்கு பயனளிக்கும் வகையில் குறித்த இழப்பீட்டு நிதியைப் பயன்படுத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.
புற்றுநோய் மருத்துவமனைக்கு 150 மில்லியனை நன்கொடையாக வழங்கவும், பேராதனை மருத்துவமனைக்கு 100 மில்லியன்களை வழங்கவும் தாம் திட்டமிட்டுள்ளதாக சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆதரவற்ற குழந்தைகளை ஆதரிக்கும் தமது தாயின் பெயரிலான தொண்டு நிறுவனத்திற்கும் நிதியளிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் சுஜீவ சேனசிங்கவுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்த கருத்துகளுக்காக, முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய்களை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், தீர்ப்பை எதிர்த்து சி.பி ரத்நாயக்க மேன்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.