மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில், சிகிச்சை சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த கத்திக்குத்து தாக்குதல் நேற்று இரவு (03) 10பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இரண்டு மரக்கறி வியாபாரிகளுக்கு இடையில் ஏற்பட்டிருந்த முரண்பாடே கத்திக்குத்து தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு சென்று மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்று ஆரையம்பதி பகுதியில் வாள்வெட்டுக்குழுக்களை கட்டுப்படுத்துமாறு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்ட நிலையில் இன்று மாலை மட்டக்களப்பு நகருக்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.