பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான ‘கிரிப்டோ’ பண வணிகம் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற பிரபல இலங்கை பிரமுகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடியான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கிரிப்டோ’ பண வணிகம், மோசடி விளம்பரங்கள், சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரச அதிகாரிகள் மற்றும் பிரபலமானவர்களின் அங்கீகாரம் உள்ளதாக பொய்யாகக் கூறும், கிரிப்டோ பண முதலீடுகளை விளம்பரப்படுத்தும் ஒன்லைன் விளம்பரங்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த விளம்பரங்களின் முக்கிய நோக்கம், பிரபலமானவர்கள் மீதான மக்களின் நல்லெண்ணத்தை சிதைத்து, அவர்கள் மீதான நம்பிக்கையை உடைப்பதற்கு மக்களை திசை திருப்புவதே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் லிதுவேனியாவிலிருந்து இயங்கும் இந்த மோசடி கணக்குகள் மூலம், இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களை இலக்காகக் கொண்டு மோசடியான விளம்பரங்கள் மற்றும் பிரசாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.