சமூக ஊடகங்களில் வீடுகள் மற்றும் காணிகள் தவணை முறையில் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தி, பொதுமக்களிடமிருந்து பெருமளவு பணம் பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 48 வயதுடைய நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் படி, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்த சந்தேகநபர், வீடுகளும் காணிகளும் வழங்கப்படும் என ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு, அவற்றின் மொத்த பெறுமதியின் 60 சதவீதத்தை முன்பணமாக வசூலித்துள்ளார்.
எனினும், வாக்குறுதியளித்தபடி வீடுகளோ காணிகளோ வழங்கப்படாததுடன், பணத்தை மீளக் கோரியவர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளும் பணமின்றி திரும்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஐந்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (28) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹானை விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.







