இந்தியாவில் ஆவி புகுந்ததாக கூறி 6 மாத குழந்தையை மந்திரவாதி ஒருவர் தலைகீழாக தீயிக்கு மேல் கட்டி தொங்கவிட்ட பெரும் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது.
பெற்றோர் , குழந்தையை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லாமல் அதே கிராமத்தை சேர்ந்த மந்திரவாதியிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக கூறிய மந்திரவாதி, அதற்கு பரிகாரம் செய்வதாக கூறியுள்ளார்.

மந்திரவாதி , நேற்று முன்தினம் (15) செங்கல்களை அடுக்கிவைத்து அதில் விறகுகள் கொண்டு தீ மூட்டியுள்ளார். பெற்றோர் கண் எதிரே அந்த தீயின் முன் பச்சிளம் குழந்தையை கட்டி தலைகீழாக தொங்கவிட்டுள்ளார்.
தீயின் வெப்பத்தால் குழந்தை அலறி துடித்துள்ளது. சம்பவத்தில் பச்சிளம் குழந்தையின் கண் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதைக்கண்டு பதறிய பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். குழந்தையில் நிலை கண்டு அதிர்ந்த வைத்தியர்கள் , பெற்றோரிடம் விசாரித்தனர்.
அப்போது, மூடநம்பிக்கையில் குழந்தையை தீயின்முன் கட்டி தொங்கவிட்டதை பெற்றோர் கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.