கதிர்காம ஆடிவேல் விழா உற்சவ திகதிகளில் மாற்றமடைந்துள்ளதாக வெளியாகும் செய்தியால் அடியார்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 26/07/2025 ம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு ஒகஸ்ட் 10ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற இருந்தது.
தற்போது திகதி மாற்றத்தையடுத்து 2025 கதிர்காம ஆடிவேல் விழா உற்சவம் ஜூன் 26ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 10ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறுகின்றது என அறியப்படுகிறது.

கதிர்காம உற்சவம் ஆடிவேல் விழாவா? ஆனி வேல் விழாவா? என்று இந்துக்கள் கேள்வி எழுப்பி அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கதிர்காமக்கந்தனின் திருவிழா இடம்பெறும் திகதிகளில் திடீர் மாற்றம் இடம் பெற்றுள்ளதாக சேவற்கொடியோன் அமைப்பு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்பதாக ஜூலை மாதம் 26ம் திகதி இடம்பெறவிருந்த கொடியேற்றம் தற்போது ஜூன் மாதம் 26ம் திகதி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அச் செய்தி கூறுகிறது.
புதிய திகதிகள்:-
கந்தனின் கொடியேற்றம் – 2025.06.26
கந்தனின் தீர்த்தோற்சவம் – 2025.07.10.

இலங்கையில் வெளியாகிய பெரும்பாலான நாட்காட்டியில் ஜுலை மாதம் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஒகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும் என குறிப்பிடப்படுகிறது.
ஆனால், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இவ் வருட பஞ்சாங்கத்தில் பிரபல ஆலயங்களின் உற்சவ திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பிரபல கதிர்காம ஆடிவேல் உற்சவ திகதி தொடர்பில் எதுவும் இல்லை.
கதிர்காம உற்சவ திகதி மாற்றத்தையடுத்து இலங்கையின் மிக நீண்ட யாழ்ப்பாணம் கதிர்காமம் பாதயாத்திரை மே மாதம் 01 ஆம் தேதி ஆரம்பமாகிறது என பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தெரிவித்தார்.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கதிர்காமம் ஆலய நிர்வாகம் இக் குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கோருகின்றனர்.