சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 677 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பறிமுதல் செய்துள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய மற்றும் தேரபுத்த கடற்படை கப்பல்களால், கடந்த ஓகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் கற்பிட்டி வெள்ளைத்தீவு மற்றும் சிலாவத்துறை சாவேரியபுரம் கடற்கரைப் பகுதிகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நம்பகமான தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேகத்திற்கிடமான 15 பைகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 677 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் மீட்கப்பட்டன.

கடற்படையினரின் திடீர் நடவடிக்கையால் கடத்தல்காரர்கள் குறித்த பொருட்களை கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மற்றும் மன்னார் கலால் துறை அலுவலகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.








