பொதுமக்களின் முறைப்பாடுகளை விரைவாகப் பெற்றுக்கொண்டு அவற்றுக்கு துரித தீர்வுகளை வழங்கும் நோக்கில், ‘118 பொது பாதுகாப்பு சேவை மையம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த சேவை மையம் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் அமைச்சின் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்கள் கட்டணமில்லா 118 அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 118.pubsec.gov.lk இணையத்தளத்தின் ஊடாகவோ தங்களது முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான முறைப்பாடுகளையும் இந்த சேவையின் மூலம் முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பான தகவல்களையும் இந்த சேவையின் ஊடாக வழங்க முடியும் என்றும், தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு விடயங்களை நேரடியாகக் கொண்டு செல்லவும் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொய்யான தகவல்கள் அல்லது தவறான முறைப்பாடுகளை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.








