ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கையுடனான தனது நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அதேவேளையில் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதாக தனது உறுதிப்பாட்டை நேற்று (22) அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயர்மட்டக் குழுவுடன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள ஷேக் அப்துல்லா, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் தனது நாட்டின் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த விஜயம், இரு நாடுகளின் நன்மைக்காக பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் புதிய நிர்வாகத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் மற்றும் அதன் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்த பிரதிப் பிரதமர், புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் முழு ஆதரவையும் உறுதியளித்தார்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் நேர்மறையான உறவுகளை வளர்ப்பதற்கும் ஜனாதிபதி திசாநாயக்கவின் தலைமை, அர்ப்பணிப்பு மற்றும் முன்முயற்சி அணுகுமுறையையும் அவர் பாராட்டினார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி திசாநாயக்க, இலங்கை இப்போது நிலையான மற்றும் முதலீட்டுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும், முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தாத கடந்த கால நிலையற்ற நிலைமைகளுக்கு நாடு திரும்பாமல் இருப்பதை உறுதி செய்வதாகவும் எடுத்துரைத்தார்.

முதலீடுகளைப் பாதுகாக்க வலுவான சட்ட கட்டமைப்புகளை செயல்படுத்துவதை அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் தொடர்ச்சியான கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகள் குறித்தும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.
துறைமுக முனைய மேம்பாடு, கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சுற்றுலா, எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளில் கிடைக்கும் பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை அவர் கோடிட்டுக் காட்டினார்.
இலங்கையை பிராந்தியத்தின் முதன்மையான முதலீட்டு மையமாகவும், முன்னணி சுற்றுலா தலமாகவும் நிலைநிறுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்று ஜனாதிபதி திசாநாயக்க மேலும் கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதிநிதிகளின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.