மட்டக்களப்பில் புதுநகர் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்த பாதை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வகையில் அதனை திறப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த வீதியானது பல்வேறு தடவைகள் திறப்பதற்கு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பாதையினை மக்கள் பாவனைக்கு மீண்டும் வழங்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக நேற்றைய தினம் (22) விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் அடைக்கப்பட்டுள்ள வேலிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் பணிகளை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன்,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம்,விமானப்படையின் கட்டளை அதிகாரி ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த வீதியானது திறக்கப்படுமானால் மட்டக்களப்பு நகரிலிருந்து வலையிறவு பாலம் ஊடாக வவுணதீவு பிரதேசத்திற்கு செல்வோர் குறைந்த தூரத்தில் செல்லமுடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.



