உள்ளுராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் அடுத்த மாதம் 3 ஆம் திதிதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வரும் காலம் அமைதியான காலமாகும், இந்த காலகட்டத்தில் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள், அதே போல் எந்தவொரு வேட்பாளரும் உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பான எந்தவொரு பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
அடுத்த மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு நேற்றுடன் (29 ஆம் திகதி) முடிவடைந்தது.

மேலும், வீடு வீடாகச் சென்று வாக்குச் சீட்டு விநியோகிக்கும் பணி (28) நிறைவடைந்ததாகவும், இதுவரை அதிகாரபூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறாத எவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகாரபூர்வ வாக்காளர் அட்டை சுமார் தொண்ணூற்றைந்து சதவீதம் விநியோகிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் வாக்குச்சாவடிகளில் இரட்டை வாக்களிப்பின் போது யாரும் பிடிபட்டால் அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதோடு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.