2017ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதில் ஏற்படும் தாமதம் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு மீண்டும் ஒருமுறை அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் தற்போது தங்கியுள்ள இந்தக்குழுவே தமது அதிருப்தியை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. எனினும் தாம் விரைவில் பயங்கரவாதத் தடைச்சட்டதை இரத்துச் செய்யப் போவதாக அரசாங்கத் தரப்பினர் உறுதியளித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு இலங்கை பொதுமைப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டம் பிளஸுக்கு தகுதி பெற்றது. இருப்பினும், இந்த திட்டத்தின் தற்போதைய விதிமுறைகள் அடுத்த ஆண்டு காலாவதியாகின்றன.
எனவே, 2027ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட அளவுகோல்களின் கீழ் இலங்கை ஜிஎஸ்பி பிளஸுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தநிலையில், இது தொடர்புடைய நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியக் குழு, 2025 ஏப்ரல் 28 முதல் மே 7 வரை இலங்கையில் தமது கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்த கண்காணிப்பின்படி, 27 சர்வதேச நியமங்களை நிறைவேற்ற வேண்டும். இதில் மனித உரிமையும் அடங்குகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியப் பகுதிக்கான ஏற்றுமதிகளில் 85 சதவீதம் ஜிஎஸ்பி பிளஸ் இலிருந்து பயனடைகின்றன. 2023 ஆம் ஆண்டில், இலங்கை 3.84 பில்லியன் யூரோ மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது.