கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிர்மாய்த்த பாடசாலை மாணவி மனநோயாளி அல்லர் எனவும் அப்படி கூறியமமைக்காக மகளிர் விவகார அமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும் என சபையில் மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் அப்படியான வார்த்தைப்பிரயோகத்தை பாராளுமன்ற ஹன்சார்ட்டி லிருந்து அகற்ற வேண்டுமெனவும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.
கொட்டாஞ்சேனை மாணவி தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அதற்கு பதிலளித்த சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அந்த மாணவி தொடர்பில் விபரங்களை முன்வைத்ததுடன் பெற்றோர்களை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாகவும் ஆனால் அவர்கள் அமைச்சுக்கு சமூகமளிக்கவில்லை எனவும் கூறினார்.
அதற்கு பதிலளித்த மனோ கணேசன் எம்.பி,

அமைச்சு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று விசாரணை செய்ய வேண்டுமே தவிர அவர்கள் உங்களிடம் வரும் வரை காத்திருக்க வேண்டுமா என்று சாடினார்.அத்துடன் மன நோயாளர் என்று கூறியமைக்காக அமைச்சர் சரோஜா மன்னிப்புக்கோரவேண்டுமென கேட்டார்.
மனோ மேலும் கூறுகையில் ,
இந்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும்.குறிப்பிட்ட மாணவிக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது.அது உண்மை. இன்று அந்த மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தும் இடத்தில் பொலிஸ் நீர்த்தாரை பிரயோக வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.கண்ணீர் புகை பிரயோக தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அப்படி செய்யாதீர்கள்.அது தவறு.
இதன்போது பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல , இந்த சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்.
அதன்பின்னர் பேசிய அமைச்சர் சரோஜா , மருத்துவ அறிக்கை மற்றும் விசாரணை அறிக்கைகளின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும் தவறாக எதனையும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்தார்.