இன்றைய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், பாட ரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் 2026 ஆகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தத் தடை, 2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று, பரீட்சை வினாத்தாளில் இடம்பெறும் அல்லது அதற்கு நிகரான வினாக்கள் வழங்கப்படும் எனக் கூறி சுவரொட்டிகள், பதாதைகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்துவதும், அவ்வாறான விளம்பரப் பொருட்களை வைத்திருப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.








