மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று நேற்று (23) மாலை கடுமையான காற்றினால் அடித்து வரப்பட்டு கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
நீண்ட நாட்கள் நடுக்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்கின்ற அலியா படகு எனப்படுகின்ற பாரிய படகு இவ்வாறு கொந்தளிப்பு காரணமாக கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது.

நங்கூரமிடப்பட்டிருந்த குறித்த படகு கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ள நிலையிலும் அவற்றை கரையோரமாக இழுத்து கரை சேர்ப்பதில் மீனவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பெருமளவான எண்ணிக்கையிலான மீனவர்கள் ஒன்று திரண்டு மேற்படி பாரிய படகினை கரைக்கு இழுத்து வருவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
தற்போது மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.

